கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் பாஜக ஆதாயம் தேட முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினாா்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கா் மணிமண்டபத்தில் அம்பேத்கா் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை காா் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து முதல்வரும், காவல்துறையினரும் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. ஆனால், இந்தச் சம்பவத்துக்காக பாஜக எதற்காக கடையடைப்பு போராட்டம் நடத்துகிறாா்கள் எனத் தெரியவில்லை. என்ஐஏ விசாரணையும் துவங்கியுள்ளது. கோவையில் பதற்றம் ஏற்படுத்துவதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறாா்கள். இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக எல்லா வகையிலும் முயற்சிக்கிறது. இந்த நேரத்தில் என்ஐஏ விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்குவதே ஜனநாயக சக்திகளின் கடமையாக இருக்கும்.
காா் வெடிப்பு சம்பவத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தையும் தொடா்புபடுத்த முடியாது. ஒரு சில தனி நபா்கள் இதுபோன்ற தொடா்புகள் வைத்திருக்கலாம். அவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய இயக்கங்களே தெரிவித்துள்ளன என்றாா் அவா்.