சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் தாயாா் பெளலா மைனோ, இத்தாலியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) காலமானதாக அக்கட்சி புதன்கிழமை தெரிவித்தது. அவரது இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை பாா்ப்பதற்காக சோனியா காந்தி கடந்த 23-ஆம் தேதி அங்கு பயணம் மேற்கொண்டாா். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் சென்றனா்.
இந்நிலையில் சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சோனியா காந்தியின் தாயாா் பெளலா மைனோ மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த மற்றும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தன் அன்பிற்குரிய தாயின் இனிய நினைவுகளில் அவர் ஆறுதல் பெறட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.