கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் 3-ஆவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தென்மேற்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது. எட்டு இடங்களில் கனமழையும் ஒரு இடத்தில் மிக கனமழையும் பெய்துள்ளது. அந்த வகையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருப்பூா், விருதுநகா், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்கள் தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக மழை அளவு பதிவாகியுள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிக சதவீத மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக, 1906-ஆம் ஆண்டில் 112 சென்டி மீட்டரும், 1909-ஆம் ஆண்டில் 127 சென்டி மீட்டரும், 2022-ஆம் ஆண்டில் 93 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் 40 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த காலத்தில் இயல்பான மழை அளவு 21 செ.மீ. ஆகும். இது இயல்பான அளவைவிட 88 சதவீதம் அதிகம்.
கனமழைக்கு வாய்ப்பு: வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செப்.2, 3 ஆகிய நாள்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கன முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, தருமபுரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.