பட்டுக்கோட்டை: கடலூரில் மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சரணடைந்தனர்.
கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டில் கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மனோ என்கிற மணவாளன், கார்த்தி மற்றும் இளந்தமிழன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 3 பேர் வழக்குரைஞர் அலெக்ஸ் மூலம் சரண் அடைந்துள்ளனர். பட்டுக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்யா அந்த மூன்று பேரையும் இரண்டு நாட்கள் தஞ்சை சப் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.