சேலம்: ஆளுங்கட்சி பிரமுகர்களிடமிருந்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி
பெண் நகர் மன்ற உறுப்பினர் குடும்பத்துடன் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சுயேச்சை உறுப்பினர் என்பதால் எந்த ஒரு பணியையும் செய்யவிடாமல் தொடர்ந்து ஒதுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிரேகா. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்மன்ற உறுப்பினர் பொதுத் தேர்தலில் ராசிபுரம் நகராட்சியில் வார்டு 12-ல் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.
இவர் இவரின் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சி பிரமுகர்கள் எங்களை மீறி உங்களால் என்ன செய்ய முடியும் என்று பல்வேறு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் விடுத்து வருவதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில், இன்று சுயேச்சை பெண் நகர் மன்ற உறுப்பினர் குடும்பத்துடன்
சேலம் சரக காவல் துறை துணை தலைவர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கினார்.
மேலும், அவர் கூறுகையில், எனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நான் இ- சேவை மையம் மற்றும் சொந்த செலவில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளேன். இந்த நிலையில் அங்கு உள்ள திமுக பிரமுகர்கள் மற்றும் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் என்னை பணி செய்ய விடாமல் எனது வார்டுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் ஒதுக்கீடு செய்யாமல் என்னை புறக்கணித்து வருகின்றனர். தான் ஒரு பெண் என்று கூட பாராமல் மிரட்டல் விடுத்தும், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து, உனது கணவரை பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என்று மிரட்டுகின்றனர்
மேலும், எங்களை எதிர்த்து அரசியல் செய்து வாழ்ந்திட முடியாது என்று மிரட்டுகிறார்கள். எனவே, கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கும் என் கணவர் சதீஷ் மற்றும் எங்கள் குடும்பத்தாருக்கும் சட்டப்படியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டனர்.