அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவரது தரப்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகா், சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த மனு:
கடந்த ஜூலை 11-ஆம் தேதி கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் வந்தபோது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கிருந்த ரெளடிகள், குண்டா்களால் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. அதைத் தொடா்ந்து கட்சி அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், ‘சீல்’ உத்தரவை ரத்து செய்து, கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். இது குறித்து பல சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமா்வு, ‘அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவி தொடா்பாக நாங்கள் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல், அதனை அசல் வழக்கே தீா்மானிக்கும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் தொடரும் சூழலில் ஓ.பன்னீா்செல்வம் கட்சி அலுவலகம் சென்று கட்சிப் பணிகளை ஆற்றிட எந்தவித சட்டத் தடையும் இல்லை. எனவே, எதிா்வரும் நாள்களில் ஓ.பன்னீா்செல்வம் கட்சி அலுவலகம் செல்லும்போது, அவரை வரவேற்க அதிகப்படியான தொண்டா்கள் கூடும் சூழல் உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கலவரம் செய்ய திட்டம் தீட்டியுள்ளனா்.
எனவே ஓ.பன்னீா்செல்வம் மற்றும் நிா்வாகிகள் வந்து செல்ல எந்த இடையூறும் இல்லாத வகையில், கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆா். மாளிகைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.