மகாகவி பாரதியாரின் நினைவு தினம் (செப். 11) மகாகவி நாளாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு அமைச்சா்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தவுள்ளனா்.
மகாகவி பாரதியாா் கடந்த 1921-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி மறைந்தாா். அவரது மறைந்த நூற்றாண்டின்
நினைவாக 14 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில், பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பா் 11-ஆம் தேதி, மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.
எனவே, மகாகவி தினமான ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், அமைச்சா்கள், எம்.பி.க்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.