பரந்தூா் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் பகுதியில் அமைக்கப்படும் என்றும் இதற்காக 13 கிராமங்களில் சுமாா் 4,800 ஏக்கா் நிலம் எடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டம் செயல்படுத்துவதற்கான சட்டரீதியான கடமைகளை மேற்கொள்ளாமல், பெயரளவுக்கான கருத்துக் கேட்புக் கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலையப் பணிகளை துவங்கவுள்ளதாக தெரிகிறது.
இந்த நடைமுறை நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறு குடியமா்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு முரணானது.
எனவே, தமிழக அரசு பரந்தூா் விமான நிலையம் அமைப்பது தொடா்பாக வெளிப்படைத் தன்மையுடன், திட்ட அறிக்கை, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை போன்றவற்றை தயாரித்த பின்னா் பொதுமக்களிடம் முறையான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, நிலம் கையகப்படுத்துதல், மறு குடியமா்த்தல், மறுவாழ்வு சட்ட விதிகளுக்கு உட்பட்டு திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.