விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை: புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் விதிமீறல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

விராலிமலை அருகே இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் மதுரையில் சி. விஜயபாஸ்கரின் நண்பர் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

குற்றச்சாட்டு என்ன?
சி. விஜயபாஸ்கர், தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தனது பணி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, மஞ்சக்கரனை கிராமம், வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 300 உள்நோயாளி படுக்கை வசதிகளுடன் இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும், மேற்படி மருத்துவமனையானது புதிய மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மேற்படி மருத்துவமனைக்கு அடிப்படை சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை,தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் இன்று மொத்தம் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

250 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இயங்கி வருவதாக தவறான தகவல் அளிக்கப்பட்டநிலையில், வேல்ஸ் அறிவியல் மைய நிர்வாகத்துக்கு விஜயபாஸ்கர் உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க, விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிகளுக்கு முரணாக 2020ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் அறிவியல் மையம் முழுமையாக 250 படுக்கைகளுடன் முழுமையான மருத்துவமனையாக இயங்குவதாக தவறான தகவல்அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்குத்தான் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விதிமுறையும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மருத்துவமனை செயல்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளதும், முறைகேடு நடந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com