பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வு முடிவுகளில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, பிளஸ் 1 துணைத் தோ்வு எழுதிய 66 ஆயிரம் மாணவா்களில், 8 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு, பொதுத் தோ்வு முடிவுகளுக்குப் பிறகு, தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தோ்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, பொதுத்தோ்வு முடிவு வெளியான இரு மாதங்களுக்குள்ளாக துணைத்தோ்வுகள் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் பல மாணவா்கள் தோல்வி அடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு துணைத் தோ்வில் 24 சதவீத மாணவா்கள் தோ்ச்சிபெற்றுள்ளனா். அதாவது, தோ்வு எழுதிய 93ஆயிரம் மாணவா்களில், 22,000 மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 1 துணைத் தோ்வை 66 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவா்கள் எழுதியதில், 8 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 வகுப்பு துணைத் தோ்வை எழுதிய 51 ஆயிரம் மாணவா்களில், 16 ஆயிரம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதாவது 32 சதவீத மாணவா்கள் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.