நரிக்குறவர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்படுவார்கள் என்கிற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் விருதுநகரில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழகத்தில் நரிக்குறவா்கள், குருவிக்காரா்கள் சமூகங்களைப் பழங்குடியினா் (எஸ்டி) பட்டியலில் சோ்க்கும் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதையும் படிக்க.. மருத்துவமனை தூய்மை பணியாளரை கரம் பிடித்த பெண் மருத்துவர்
இதற்கு, நரிக்குறவர் இன மக்கள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில், ‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காகக் திமுக அரசு எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், இதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரிக்குச் சென்று நரிக்குறவர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் கிராமங்களில் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்டறிந்து தேவைகள் மதிப்பீட்டுப் பட்டியல் தயார் செய்திடவும் தலைமைச் செயலாளர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, நரிக்குறவர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்படுவார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகியிருக்கும் இவ்வேளையில், நரிக்குறவர் இன மக்களின் சமூகநீதிக்காக அனைத்து மட்டங்களிலும் திமுக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்காகவும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காகவும் நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் விருதுநகரில் இன்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சமத்துவப் பெரியார் கலைஞரின் வழியில் நடக்கும் அரசு, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மைச் சமூகங்களுக்கான பிரதிநிதியாக இருந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் என்றும் துணைநிற்கும் என்று அவர்களிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.