வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இன்று சனிக்கிழமை அதிகாலை சாலையோர இரும்புத் தடுப்பு வேலியில், கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த தந்தை- மகள் இருவர் பரிதாபமாக பலியாகினர். இரு சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(62). இவர், பெங்களூருவில் உள்ள டயர் ரீடிரேடிங் செய்யும் சிறுதொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். நெய்வேலியில் வசித்து வந்த இவரது தாயார் இறந்து போனதாக தகவலறிந்த பார்த்திபன், சனிக்கிழமை அதிகாலை தனது மனைவி பத்மாவதி (58), மகள் மகாலட்சுமி (37), மருமகன் குங்குமராஜ் (42) பேத்திகள் அனல்யா(9), சமிட்ஷா(11) ஆகியோருடன் பெங்களூரு வில் இருந்து நெய்வேலி நோக்கி வாழப்பாடி வழியாக சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், காரில் சென்றுள்ளனர். காரை, பார்த்திபனின் மருமகன் குங்குமராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.
கார், வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது, கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு வேலியில் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பார்த்திபன், அவரது மகள் மகாலட்சுமியும், சேலம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுமி அனல்யா, சமிட்ஷா, பார்த்திபன் மனைவி பத்மாவதி, மருமகன் குங்குமராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.