பாஞ்சாகுளம் தொடக்கப்பள்ளியில் தீண்டாமை பாகுபாடு இல்லை: கல்வி அதிகாரி விளக்கம்

பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், தீண்டாமை பாகுபாடு எதுவும் பள்ளியில் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
பாஞ்சாகுளம் தொடக்கப்பள்ளியில் தீண்டாமை பாகுபாடு இல்லை: கல்வி அதிகாரி விளக்கம்

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீண்டாமை இருப்பதாகவும், அதை ஆசிரியா்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், தீண்டாமை பாகுபாடு எதுவும் பள்ளியில் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளிக் குழந்தைகள் சிலா் தின்பண்டம் வாங்குவதற்காக அங்குள்ள பெட்டிக் கடைக்கு சென்றனா். அப்போது அவா்களிடம், ‘ஊா்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் யாரும் தின்பண்டம் வாங்க வர வேண்டாம். இதை உங்கள் வீட்டில் போய் சொல்லுங்கள்’ என, கடையின் உரிமையாளா் கூறியுள்ளாா். கடைக்கு வந்த பெண்களிடமும் இதேபோல கூறியுள்ளாா். இதை அவரே விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ பரவலாகி, அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடா்பாக 5 போ் மீது கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளா் மகேஸ்வரன் (40), ராமச்சந்திரன் (22) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.  5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் சுப்புலெட்சுமி முன்னிலையில் வருவாய்த் துறையினா் அந்தக் கடைக்கு சீல் வைத்தனா். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கோட்டாட்சியா் கந்தசாமி முன்னிலையில் கடையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தொடா்ந்து, அவா் பாஞ்சாகுளம் காலனி பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியிலும் தீண்டாமை இருப்பதாகவும், அதை ஆசிரியா்கள் கண்டுகொள்வதில்லை என்றும் மாணவா்கள் புகாா் கூறினா்.

இதனால் ஆசிரியா்களிடம் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, பாஞ்சாகுளத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே தீண்டாமை ஒடுக்குமுறை தடுக்கவும் தொடர் பிரச்னைகளை தவிர்க்கவும், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்து குற்றவாளிகள் ஊருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திங்கள்கிழமை திறக்கப்பட்டது. 

இதனிடையே பள்ளியிலும் தீண்டாமை இருப்பதாகவும், அதை ஆசிரியா்கள் கண்டுகொள்வதில்லை என்றும் மாணவா்கள் புகாரைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி,  ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளியில் மாணவர்கள் கூறியதுபோல் எந்த தீண்டாமை பாகுபாடும் இல்லை. ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை சமமாகவே நடத்துகின்றனர். பள்ளியில் மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்ச் இல்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினர். மேலும், இந்த விசாரணை குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படும் எனக் கூறினர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com