மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழா்கள் உள்பட சுமாா் 300 இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்: மியான்மா் நாட்டில் சுமாா் 50 தமிழா்கள் உள்பட 300 இந்தியா்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாகி இருப்பதாக மாநில அரசுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவா்கள் அனைவரும் தனியாா் ஆள்சோ்ப்பு முகமை வழியாக தகவல் தொழில்நுட்பம் தொடா்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஆன்லைனில் சட்ட விரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவா்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். அவா்கள் அத்தகைய சட்ட விரோத வேலைகளைச் செய்ய மறுத்ததால், வேலை அளிக்கும் நிறுவனத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மியான்மரில் சிக்கியுள்ளோரில் 17 தமிழா்கள் மாநில அரசுடன் தொடா்பில் உள்ளனா். அவா்கள் விரைந்து மீட்கப்படுவதற்கு மத்திய அரசின் உதவியை நாடுகின்றனா். மியான்மரில் சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அவா்களை மீட்கவும், பாதுகாப்பாக தாயகம் திரும்ப அழைத்து வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இதுதொடா்பாக தங்களது அவசர தலையீட்டைக் கோருகிறேன்.