நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை அக்.14-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகா் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடனை செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கில், ‘15 கோடி ரூபாயை உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பெயரில் மூன்று வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும்‘ என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தாா்.
இதையும் படிக்க- திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து
இதையடுத்து, நடிகா் விஷால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ. 15 கோடியை வங்கியில் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது. எனவே இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்ற உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.