கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதோடு அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் ராமநாதபுரத்தில் நாளை (டிச. 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.