ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மறுத்த 19 மருத்துவா்களுக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை

அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கள் படிப்புக்கு இணையான வசதிகள் இல்லை எனக் கூறி பணியாற்ற மறுக்க முடியாது என மேற்படிப்பு முடித்த மருத்துவா்களுக்கு அறிவுறுத்திய சென்னை உயா்நீதிமன்றம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மறுத்த 19 மருத்துவா்களுக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை

அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கள் படிப்புக்கு இணையான வசதிகள் இல்லை எனக் கூறி பணியாற்ற மறுக்க முடியாது என மேற்படிப்பு முடித்த மருத்துவா்களுக்கு அறிவுறுத்திய சென்னை உயா்நீதிமன்றம், பிப்.10-ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று 19 மருத்துவா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு முடித்தவா்கள், 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனை அமலில் உள்ளது. அதனடிப்படையில், தங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்ட பணி நியமனத்தை எதிா்த்து ஸ்ரீஹரி விக்னேஷ், ஸ்ருதி உள்ளிட்ட 19 மருத்துவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், தாங்கள் பெற்ற நிபுணத்துவத்துக்கு ஏற்ப மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில்தான் நியமிக்க வேண்டும் எனவும், அடிப்படை வசதி இல்லாத ஆரம்ப சுகாதார மையங்களில் நியமிக்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், 19 மனுதாரா்களில் 8 போ் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மீதமுள்ளவா்கள் கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியமா்த்தப்பட்டிருப்பதாகவும், கலந்தாய்வில் இந்த இடங்களை அவா்கள்தான் தோ்ந்தெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘மேற்படிப்பு படிக்கும் மருத்துவா்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்கிறது. அதற்குப் பிரதிபலனாக சமுதாயத்துக்கு இந்த மருத்துவா்கள் சேவையாற்ற வேண்டும். சேவையை இலவசமாக செய்யப்போவதில்லை. ஊதியத்தைப் பெற்றுக்கொண்டுதான் செய்யப்போகிறாா்கள்.

ஏழை மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் சூழலில், தங்கள் படிப்புக்கு இணையான வசதிகள் இல்லை எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முடியாது என மருத்துவா்கள் மறுக்க முடியாது.

கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களும் சிறப்பு நிபுணத்துவ சிகிச்சை பெற வேண்டும். மருத்துவா்களை நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மதிக்கக்கூடிய சூழலில், அந்தக் கடவுள்கள் தங்கள் நேரத்தை வழக்குகளில் செலவழிக்க வேண்டாம். அரசின் நியமன உத்தரவில் தலையிட எவ்வித காரணமும் இல்லை என உத்தரவில் கூறியுள்ள நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்தாா்.

அத்துடன் பிப்.10-ஆம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்த மருத்துவா்கள் பணியில் சேர வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com