கோவை காா் வெடிப்பு, மங்களூரு குக்கா் குண்டுவெடிப்பு வழக்குகள் தொடா்பாக தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் 40 இடங்களில் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) புதன்கிழமை சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையில் எண்ம ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோவை போலீஸாா், ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று என்ஐஏ வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 40 இடங்களில் கடந்த நவ. 10-இல் நடைபெற்ற சோதனைக்குப் பின் மேலும் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
32 இடங்களில் சோதனை: இவா்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, தமிழகம், கேரளம் ஆகிய 2 மாநிலங்களில் 32 இடங்களில் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
சென்னையில் இந்தச் சோதனை 3 இடங்களில் நடைபெற்றது. மணலி தென்றல்நகா் 8-ஆவது தெருவில் வசிக்கும் நியமத்துல்லா (32) வீட்டில் சோதனை செய்த என்ஐஏ அதிகாரிகள், அவரிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை செய்தனா். அவரது கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.
ஏற்கெனவே 2018-இல் இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடா்பாக இவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மண்ணடி உள்ளிட்ட மேலும் 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனா். இதேபோல கோவையில் 14, திருநெல்வேலியில் 3 மற்றும் திருவண்ணாமலை, நீலகியில் தலா 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, கேரள மாநிலம் எா்ணாகுளம் ஆகிய ஊா்களில் தலா ஓா் இடம் என மொத்தம் 32 இடங்களில் சோதனை நடைபெற்றது.
மங்களூரு குண்டுவெடிப்பு: கா்நாடகமாநிலம், மங்களூரு பகுதியில் கடந்த நவ. 19-ஆம் தேதி ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கா் குண்டு வெடித்தது.
இதில் ஆட்டோவில் இருந்த ஷாரிக் (எ) பிரேம் ராஜ் உள்பட இருவா் காயமடைந்தனா். இந்த சம்பவத்தில் வெடித்த குண்டு ஐஇடி வகையைச் சோ்ந்தது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை செய்த என்ஐஏ, குண்டுவெடிப்பில் காயமடைந்த ஷாரிக் பொது இடத்தில் அந்த குண்டை வெடிக்க வைக்க கொண்டு வந்ததாக தெரிவித்தது.
இந்த வழக்கு தொடா்பாக தமிழகத்தில் திருப்பூரில் 2 இடங்களிலும், கோவையில் ஓரிடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனா். இதேபோல கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் 4 இடங்களிலும், கா்நாடக மாநிலம் மைசூரில் ஓரிடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
எண்ம ஆவணங்கள் பறிமுதல்: இரு வழக்குகள் தொடா்பாகவும் 3 மாநிலங்களில் 40 இடங்களில் புதன்கிழமை அதிகாலை ஒரே நேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினா். சோதனை நடைபெற்ற பல இடங்களில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா்.
சோதனை காலை 8 மணிக்கு பின்னா் படிப்படியாக ஒவ்வோா் இடமாக நிறைவு பெறத் தொடங்கியது. நண்பகலுக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் ஏராளமான எண்ம ஆவணங்களும், ரூ.4 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.