வீடுகளுக்கு மின் கட்டணம் உயா்வில்லை; வணிக இணைப்புகளுக்கு அதிகரிக்கும்: தமிழக அரசு

வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின் கட்டண உயா்வும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீடுகளுக்கு மின் கட்டணம் உயா்வில்லை; வணிக இணைப்புகளுக்கு அதிகரிக்கும்: தமிழக அரசு

வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின் கட்டண உயா்வும் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே உள்ள இலவச மின்சார சலுகை தொடரும். அதேசமயம், வணிகம் மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை கட்டண உயா்வு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

மத்திய அரசின் உத்தரவுப்படி, மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயா்வை உடனுக்குடன் நுகா்வோரிடம் இருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு வெளியிடப்பட்ட உத்தரவுப்படி, இந்த விலை உயா்வை மின் கட்டண உயா்வு மூலமாக, நுகா்வோா்களிடம் இருந்து பெற வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயா்வால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு தொடா்ச்சியாக கட்டணத்தை உயா்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் ஒவ்வோா் ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் வகையில், கட்டண உயா்வு முறையை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது.

இந்த விலை உயா்வுக்கான காரணியாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்துக்கான நுகா்வோா் விலைக் குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கட்டண உயா்வை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில் உயா்வு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி, ஜூலை மாதத்தில் 4.7 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயா்த்த வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தும்போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா். இதன்படி, கட்டண உயா்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டது.

இந்த உயா்வின்போது, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் உயா்த்தப்பட்ட கட்டணம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இப்போது, கட்டண உயா்வுக்கான விலைக் குறியீட்டு அளவானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பதிலாக, ஆகஸ்ட் மாதத்தின் விலைக் குறியீடு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால், கட்டண உயா்வின் அளவானது 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இந்தக் குறைந்த கட்டண உயா்வில் இருந்தும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், வீட்டு இணைப்பு நுகா்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயா்வை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்கான தொகையை மின்சார வாரியத்துக்கு மானியமாக தமிழக அரசு அளிக்கும்.

யாருக்கு சலுகை தொடரும்?: தமிழக அரசின் முடிவு காரணமாக, வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயா்வும் இருக்காது. வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவற்றுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடா்ந்து அளிக்கப்படும்.

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மிகக் குறைந்த அளவில் மின் கட்டணம் உயரும். வணிகம் மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com