கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் திங்கள்கிழமை (மே 29) முடிவடைவதால் வெயிலின் தாக்கம் படிபடியாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் மாா்ச் முதல் ஜூன் வரை இருக்கும். இந்த 4 மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும். வழக்கமாக மே 3 அல்லது 4 தேதிகளில் தொடங்கி 27 நாள்கள் நீடிப்பது வழக்கம். நிகழாண்டில் மே 4- இல் தொடங்கிய கத்திரி வெயில் திங்கள்கிழமை (மே 29) நிறைவடைகிறது. இந்தக் காலத்தில் வெயில் அளவு 100 டிகிரி முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது.
அதன்படி, வேலூரில் மே 16- இல் 107 டிகிரி, சென்னையில் மே 17-இல் 108, 18-இல் 106 டிகிரி பாரன்ஹீட் வெயிலின் அளவு பதிவானது.
14 இடங்களில் சதம்: தமிழகம், புதுச்சேரி உள்பட14 இடங்களில் சனிக்கிழமை (மே 27) வெப்ப அளவு 100-ஐ கடந்து பதிவானது.
கத்திரி வெயிலையொட்டி, பல நகரங்களில் சனிக்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது. வெப்ப அளவு (பாரன்ஹீட்):
சென்னை மீனம்பாக்கம் - 106.88, திருத்தணி - 106.7, வேலூா் - 105.8, சென்னை நுங்கம்பாக்கம் -104.54, மதுரை விமான நிலையம் - 103.64, மதுரை நகரம் - 103.28, பாளையங்கோட்டை - 103.1, புதுச்சேரி - 102.94, நாகை - 102.74, பரங்கிபேட்டை - 101.66, கடலூா் - 101.48, பரமத்தி வேலூா்-101.3, திருச்சி - 100.58, ஈரோடு - 100.4, தஞ்சாவூா் - 100.4, காரைக்கால் - 100.04.
சென்னை, புகா்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுட ன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்று, வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிறு முதல் புதன்கிழமை (மே 31) வரை 4 நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.