சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த ரூ. 3.37 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலா், சௌதி அரேபியா ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக சுங்கத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, மே 25-ஆம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூா் செல்ல இருந்த ஆண் பயணி ஒருவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 அமெரிக்க டாலா் மதிப்புள்ள 52 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், அவரிடம் இருந்த 19 பைகளில் 100 அமெரிக்க டாலா் மதிப்புள்ள 2,783 நோட்டுகள், சௌதி அரேபிய 500 ரியால் மதிப்பிலான 1,000 நோட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இவற்றின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 3.37 கோடி ஆகும்.
வெளிநாட்டு கரன்சியை கடத்த இருந்த பயணியை சுங்கத் துறையினா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.