இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காசாவில் கடந்த இரண்டு வாரமாக மின்சாரம், தண்ணீர் ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டு வருவதாகவும் செய்திகள் வருகின்றன. காசாவில் உள்ள மருத்துவமனை தாக்கப்பட்டதில் மட்டும் 500 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இது உலகப் போராக மாறிவிடுமோ என்ற அச்சம் பொதுவாக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அமைதியின் அடித்தளமாக விளங்கும் இந்தியத் திருநாட்டின் பிரதமர் மோடி, உலகத்தில் போர் மேகங்கள் மறைந்து அமைதி நிலவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக் கூடியவர். இந்தியாவை வல்லரசாக்க வேண்டும், இந்திய ராணுவத்தை வலிமை மிக்க ராணுவமாக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே இருந்தாலும், அது நம் நாட்டின் பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டதே தவிர, பிற நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக அல்ல.
இன்னும் சொல்லப் போனால், பிற நாடுகளின் சுதந்திர உணர்வை போற்றி மதிக்கக் கூடியவர் இந்தியப் பிரதமர்.
பயங்கரவாதத்தை தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் நம் பாரதப் பிரதமர். உலகத் தலைவர்களின் நன் மதிப்பையும், அன்பையும் பெற்றிருக்கும் பாரதப் பிரதமர், இஸ்ரேல் நாட்டு பிரதமருடனும், பாலஸ்தீன தேசிய அதிகார சபையின் தலைவருடனும் இது குறித்து பேசியிருப்பதும், பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பாலஸ்தீன தேசிய அதிகார சபையின் தலைவரிடம் உறுதி அளித்திருப்பதும் ஆறுதலைத் தருகிறது.
இருப்பினும், இஸ்ரேல் - காசா பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உலக நாட்டுத் தலைவர்களுடன் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி பேச்சு வார்த்தைக்கு வழிவகுக்கவும், அமைதியை நிலை நாட்டவும், அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழவும், உலகப் பொருளாதாரம் மேம்படவும் இந்தியப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.