சேலம்: ஆத்தூர் அருகே கீரிப்பட்டி கீழ்க்கணவாய் பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரம், நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய பயிர்கள் கீழே சாய்ந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கீரிப்பட்டி கீழ்கணவாய் கிராமத்தில் சுமார் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல், வாழை மரம் , மக்காச்சோளம், அரளி பூ செடி உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு வந்துள்ளனர்.
தற்போது கோடை காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலில் தாக்கம் சுட்டு எரித்து வந்த நிலையில் விவசாய பயிர்கள் கருகும் நிலையில் திடீரென கீரிப்பட்டி கீழ்கணவாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் மாலை திடீரென சூறைக்காற்றுடன் ௯டிய கனமழை ஒருமணி நேரமாக பெய்தது.
இதனால் நெல், வாழைமரம் மக்காச்சோளம், அரளி பூ செடிகள் உள்ளிட்ட பயிர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயி பயிர்கள் அறுவடைக்கு வரும் நேரத்தில் திடீரென வெள்ளிக்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பயிர்கள் கீழே சாய்ந்து சேதம்மடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கில் கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கீழ்க்கணவாய் சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு உடனடியாக தகுந்த நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.