தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழைய ஆற்காடு பகுதியில் அரசு பேருந்து கூட்டுக் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இருந்து பத்தாளப்பேட்டை, இந்தளூர், மாறனேரி வழியாக திருக்காட்டுப்பள்ளி வரும் அரசு பேருந்து திங்கள்கிழமை காலை 8 .15 மணி அளவில் பழைய ஆற்காடு மாதா கோயில் அருகில் 75 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தபோது, கூட்டுக் குடிநீர் குழாய்க்காக சாலை ஓரம் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் தோண்டப்பட்டிருந்த பகுதியில் மழையின் காரணமாக மணல் உள்வாங்கி இருந்துள்ளது. இது அறியாத அவ்வழியாக வந்த பேருந்து பாரம் தாங்காமல் பள்ளத்தில் சிக்கி மெதுவாக சாய தொடங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் பேருந்தை விட்டு கீழே இறங்கியுள்ளனர். இதனிடையே பேருந்து முழுமையாக சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் தப்பினர்.
உடனடியாக அவர்களை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை மற்றும் பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினர்.
இந்த விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.