பெரம்பலூர்: ஜெர்மன் வங்கி நிதியுதவியோடு 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தமாகியுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ஜெர்மன் வங்கி நிதியுதவியோடு 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தமாகியுள்ளது. இதில், முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
மின்சார பேருந்துகள் முதலில் சென்னையில் பரிச்சார்த்த முறையில் இயக்கி பரிசோதிக்கப்பட்டு, அதற்கு அடுத்தப் படியாக பெருநகரங்களில் இயக்கப்படும்.
போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்றவர்களுக்கு தினப்படி உயர்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மிகுந்த கடன் சூழலில் தான் தமிழ்நாடு முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். போக்குவரத்துத் துறையில் உள்ள பிரச்னைகளையும் முதல்வர் சீரமைத்து வருகிறார்.
இதையும் படிக்க | காவிரி ஆற்றுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்!
ஒய்வுப் பெற்ற தொழிலாளர் பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். விரைவில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு நவீன தொழில்நுட்பத்தோடு ஆன்லைனில் தானியங்கி டிக்கெட் வழங்குகின்ற இயந்திரங்களுக்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இது விரைவில் உறுதிசெய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்ட பிறகு, மற்ற பகுதிகளிலும் நடைமுறைக்கு வரும்.
கோயம்புத்தூரில் குழைந்தையுடன் சிரமப்படுவாகக் கூறி தேனிக்கு பணி மாறுதல் கேட்டவருக்கு, 7 மணி நேரத்தில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சிவசங்கர்.
பேட்டியின் போது, மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.