
நாக்பூர்: நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புணே செல்லவிருந்த இண்டிகோ விமானத்தின் தமிழக விமானம், வியாழக்கிழமை விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இது குறித்து விமான நிலைய இயக்குநர் அபித் ரூஹி கூறுகையில், நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புனே செல்லவிருந்த இண்டிகோ விமானத்தை வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு இயக்கவிருந்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானி மனோஜ் சுப்ரமணியம்(40). ஆனால் அவர் விமானம் புறப்படுவதற்கு 55 நிமிடங்களுக்கு முன்பு மதியம் 12.05 மணிக்கு விமான நிலைய நுழைவு வாயில் அருகே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் முதற்கட்ட தகவல்களின்படி, விமானி "திடீர் மாரடைப்பு" காரணமாகவே இறந்தார் என்று கிம்ஸ்-கிங்ஸ்வே மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஏஜாஸ் ஷமி கூறினார்.
பின்னர், சுப்ரமணியத்தின் உடல் கூறாய்வுக்காக நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடல் கூறாய்வுக்குப் பிறகு உடல் இன்று (வெள்ளிக்கிழமை) குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரியின் டீன் மருத்துவர் ராஜ் கஜ்பியே தெரிவித்தார்.
இதற்கிடையில், வியாழக்கிழமை நாக்பூர்-புணே விமானம் சம்பவம் நடந்த பின்னர் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த விமான நிறுவன செய்தித் தொடர்பாளர், “நாக்பூர் விமான நிலையத்தில் எங்கள் விமானி மனோஜ் சுப்ரமணியம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். அவரது மறைவு எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உள்ளனர். அவர்களுக்கு எங்களின் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் துயரமான தருணத்தில் அவர்களுடன் நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கத்தார் ஏர்வேஸின் மூத்த விமானி ஒருவர் தில்லி-தோஹா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.