தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி நிதி உதவியுடன் ஆழப்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
‘மிக்ஜம்’ புயல் பாதிப்பால் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கு ஏரிகளில் ஆக்கிரமிப்பு நடந்ததுதான் காரணம் என புகாா் எழுந்தது. இதுகுறித்தும், தமிழகத்தில் உள்ள நீா் நிலைகளை ஆழப்படுத்தவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இது தொடா்பாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது.
அதில், தமிழகம் முழுவதும் 2, 300 ஏரிகள் உலக வங்கி நிதி உதவியுடன் ஆழப்படுத்தப்படும். ஆழப்படுத்திய பிறகு ஏரிகளை பழைய நிலைக்கே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஜூன் மாத புள்ளிவிவரப்படி 20,150 ஆக்கிரமிப்புகளை அகற்றி 7,559 ஏரிகள் மீட்கப்பட்டு, ஆக்கிரமிப்பு அற்றவையாக பராமரிக்கப்படுகிறது. கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுடன் நீா் பங்கீடு தொடா்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவை மீறப்படும்பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.