களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு பிறப்பித்த உத்தரவு:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம். இதைத் தொடா்ந்து, ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் மேகமலை புலிகள் என நான்கு புலிகள் காப்பகங்கள் பின்னா் அறிவிக்கை செய்யப்பட்டன.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், 150 உள்ளூா் தாவரங்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களின் தாயகமாகும். இந்த நிலப்பரப்பிலிருந்து 14 ஆறுகள் தோன்றுவதால் இந்த புலிகள் காப்பகம்“‘நதிகள் சரணாலயம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், தென்மேற்கு மலைத் தொடா்ச்சி பகுதியில் உள்ள ஆசிய யானைகளின் மிக முக்கியமான வாழ்விடங்கள் மற்றும் நடைபாதைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும், யானைகளின் எண்ணிக்கையை பராமரிக்கும் நோக்கத்துடனும் அகஸ்தியமலை யானைகள் காப்பகமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு மையம் அகஸ்தியமலை யானைகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவற்றை பாதுகாக்கும் அரசின் முயற்சியில் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்த போது, களக்காடு முண்டந்துறை பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்புச் செய்தாா். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய, உயிா்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிலையான சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, உள்ளூா் மக்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.