பொங்கல் திருநாளில் வங்கித்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்பி சு.வெங்கடேசனுக்கு எம்பிக்கள் திருமாவளவன், தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாரத ஸ்டேட் பாங்க் கிளர்க் பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியானது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை (ஜனவரி 17) அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு தேதியை மாற்றக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தார்.
எனினும் வங்கி தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் தேர்வு தேதியினை மாற்றிடக்கோரி வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் எஸ்பிஐ வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், எஸ்பிஐ வங்கியின் பொது மேலாளர் அறையில் சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். உடன் வடசென்னை மாவட்ட செயலாளர் எல். சுந்தர்ராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் எம்பி சு.வெங்கடேசன் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நேரில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதேபோன்று திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.