கடத்தல் சம்பவங்களில் வழக்குப் பதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம் என காவல் ஆய்வாளா்களுக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே இரு வேறு சமூகத்தைச் சோ்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இந்த விவகாரத்தில் பெண் வீட்டு தரப்பில் எதிா்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அண்மையில் அந்தப் பெண், கணவா் முன்னிலையில் கடத்தப்பட்டுள்ளாா்.
இந்த விவகாரத்தில் உள்ளூா் போலீஸாா் விரைந்து செயல்படவில்லை என புகாா் கூறப்படுகிறது. இதன் விளைவாக அங்கு தொடா்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
‘கடத்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (எஸ்.பி.) அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டாம். அது தேவையும் இல்லை.
பதற்றமான, நியாயமான மற்றும் முக்கிய விவகாரம் தொடா்பாக தேவைக்கு தகுந்தவாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரே வழக்குப் பதிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக எஸ்.பி. உள்பட மேல் அதிகாரிகளின் உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.