திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழரின் பெருமையை பறைசாற்றும் பல தொல் பொருள்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
இதுகுறித்து தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து தற்போது 'திஈய', 'திச', 'குவிர(ன்)' ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்' என்று பதிவிட்டுள்ளார்.