கலைஞா் மகளிா் உரிமைத் தொகை: யாா், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு

‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது. அதன் விவரம்:

1. 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது, 2002-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

2. நியாயவிலைக் கடைகள்தான் ஒரு கணக்கெடுப்பின் மையமாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரா்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

3. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவா்.

விண்ணப்பிக்க விரும்பும் குடும்பத்தலைவிகள் கவனத்துக்கு...

1. குடும்ப அட்டையில் பெயா் இடம் பெற்றுள்ளவா்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவா்.

2. ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.

3. குடும்ப அட்டையில் குடும்பத்தலைவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவாா்.

4. குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவாா்.

5. திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவா்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவா்.

6. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினா்கள் தோ்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

பொருளாதாரத் தகுதிகள்:

1. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

2. ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.

3. ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.

4. பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.

யாருக்குக் கிடைக்காது?

1. ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.

2. குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் ரூ.2.5 லட்சம் மேல் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவா்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவா்கள்.

3. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோா்.

4. மாநில, மத்திய அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியா்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியா்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரா்கள்.

5. தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்களைத் தவிர). அதாவது நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சித் தலைவா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள்.

6. சொந்தப் பயன்பாட்டுக்கு காா், ஜீப், டிராக்டா், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவா்கள்.

7. ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளா்கள்.

8. ஏற்கெனவே முதியோா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளா் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.

விதிவிலக்கு:

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com