6 மாதங்களாக தினமும் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்ட கோவை டிஐஜி!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த ஆறு மாதங்களாக தினமும் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார்
கோவை சரக டிஐஜி விஜயகுமார்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த ஆறு மாதங்களாக தினமும் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சரக டிஐஜி செ.விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய பாதுகாவலர் ரவிசந்திரன்(35) ராமநாதபுரம் போலீஸில் புகார் அளித்திருந்தார். 

அதில், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கோவை சரக டிஐஜிக்கு தனி பாதுகாப்புக் காவலராக இருந்து வருகிறேன். பாதுகாப்புப் பணியில் உள்ள எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து 183 என்ற 9 எம்எம் ரக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது. டிஐஜி முகாம் அலுவலகத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் தங்கியுள்ளேன்.

கோவை டிஐஜியாக விஜயகுமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவர் வந்த நாளில் இருந்தே தனக்கு தூக்கம் வருவதில்லை எனக் கூறுவார். மேலும், தூக்கத்துக்காக தினமும் மாத்திரை எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

கடந்த 7-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு வழக்கு விவரங்கள் பதியப்படும் டிஎஸ்ஆர் புத்தகத்தைக் கேட்டு எனது அறைக்கு வந்தார். அதை வாங்கிக் கொண்டு நான் பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்த இடத்துக்குச் சென்ற அவர், துப்பாக்கியைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு அதை சிறிது நேரம் பார்த்தார். பின்னர், இதை எப்படிக் கையாள வேண்டும் என என்னிடம் கேட்டார். நான் சொல்லிக் கொண்டு இருந்தபோதே துப்பாக்கியுடன் அவர் வெளியில் சென்று விட்டார்.

உடனே நான் உடையை மாற்றிக்கொண்டு வெளியில் வர முயன்றேன். அதற்குள் வெளியில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது. நானும், என்னுடன் இருந்த ஓட்டுநர் அன்பழகனும் ஓடிச்சென்று பார்த்தோம். அப்போது, டிஐஜி தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். என்னிடம் இருந்து எடுத்துச் சென்ற துப்பாக்கி அருகில் கிடந்தது.

அதிர்ச்சியான நாங்கள் இதை அவரது மனைவியிடம் தெரிவிக்க சப்தம் போட்டுக் கொண்டே ஓடினோம். நாங்கள் அவரிடம் நடந்தவற்றைக் கூறினோம். பிறகு, டிஐஜியை தூக்கிக்கொண்டு காரில் காலை 7 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் டிஐஜி உடலைப் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் சுட்டுக் கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என்று ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

பாதுகாவலர் ரவிசந்திரன் புகாரில் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com