சென்னை: தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடையைத் திறக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசு தரப்பில் ஆலோசனை மட்டும் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், டாஸ்மாக் கடைகள் காலையிலேயே திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.
தினமணி.காமில் வெளியான சிறப்புச் செய்தி... டாஸ்மாக்: கூச்சப்பட வேண்டாமா, அரசு? 90 மி.லி.யும் விடிகாலைக் கடைத்திறப்பும்!
இந்த நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். 90 எம்.எல். பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனால், டாஸ்மாக் மதுக்கடைகள் காலையிலேயே திறக்கப்படும் என்று வெளியான தகவலுக்கு அமைச்சர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.