
திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“திருப்பூரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தரமாக தங்கி பணியாற்றி வருகிறார்கள். அந்தளவுக்கு திருப்பூரில் வேலை வாய்ப்பு இருந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதுவரை இல்லாத அளவுக்கு தொழில் மோசமான நிலையை அடைந்துள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். பல இடங்களில் பின்னலாடை நிறுவனங்கள் வாடகைக்கு என்ற அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கையே ஆகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி கடன் ரத்து உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் மோடி அரசு, சிறுகுறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க கூட மறுக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்தால் தொழில்துறைக்கு நல்லது நடக்கும் என்று நினைத்த தொழிலதிபர்கள்கூட இன்று வருத்தப்படும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
பனியன் தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட காரணம் நூல் விலையில் நிலையற்ற தன்மை, பஞ்சு பதுக்கல் ஆகிய காரணங்களை கூறலாம். ஜவுளி துறையை காப்பாற்ற வலியுறுத்தி ஜவுளித்துறை அமைச்சருக்கு பலமுறை கடிதம் அனுப்பி உள்ளேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. விவசாய தொழிலுக்கு அடுத்தபடியாக ஜவுளி தொழில் தான் உள்ளது.
அதற்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை வழங்கி ஜவுளி தொழில் சிறக்க உதவ வேண்டும். தமிழ்நாட்டில் பருத்தி விளைச்சலை அதிகப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக முதல்வர் தொழில் துறையினரை அழைத்து இந்த நெருக்கடி நிலையை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து அவர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.