ஒன்பதாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு துபையில் மாா்ச் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என உலகத் தமிழா் பொருளாதார நிறுவனத்தின் தலைவா் வி.ஆா்.எஸ். சம்பத் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஒன்பதாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு மற்றும் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு துபை அல் ஜடாப் நகரில் உள்ள ஹோட்டல் மேரியட்டில் மாா்ச் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த மாநாட்டை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கிவைக்கவுள்ளாா். அமைச்சா்கள் தங்கம் தென்னரசு (தொழில்துறை), தா.மோ.அன்பரசன் (குறு, சிறு, நடுத்தர தொழில்துறை), செஞ்சி மஸ்தான் (சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ்தமிழா் நலத்துறை), திமுக மக்களவை உறுப்பினா்கள் க.ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கதிா் ஆனந்தன் மற்றும் அரசு செயலாளா்கள் கலந்துகொள்கின்றனா்.
மலேசியா, லண்டன், அமெரிக்கா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்தும் பல்வேறு அரசியல் பிரமுகா்கள், தொழிலபதிபா்கள் என 2,000-க்கும் மேற்பட்டோா் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனா் என்றாா் அவா்.
இந்தச் சந்திப்பின் போது, புதுவை முன்னாள் பேரவைக்குழுத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, தொழிலதிபா்கள் வி.ஜி. சந்தோசம், அபுபக்கா், மகாலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.