
தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாநில அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற மே 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை ஆதா ஷா்மா, புா்க்கா அணிந்து கொண்டு உரையாடும் காட்சியில், ‘ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன்; தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளன். இது கேரளத்தைச் சோ்ந்த 32,000 பெண்களின் கதை’ எனக் கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் இருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இந்தப் படம் வெளியானால் கேரளத்தை போல இங்கும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...