சென்னை: நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை(என்டிஏ) நடத்துகிறது.
அதன்படி, நிகழாண்டு நீட் தோ்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கடந்த 3 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தோ்வை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.50 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர். இந்த தேர்வை தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் அதிகாரிகள் இன்று தீவிரமாக ஆய்வு செய்தனர். அதிகாலை முதலே மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.