கருணாநிதி  நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக ஏற்பாடு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட திமுக ஏற்பாடு செய்துள்ளது. 
கருணாநிதி  நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக ஏற்பாடு!


சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு: 

தமிழே உயிராக, தமிழினமே உணர்வாக, தமிழர் நலனும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே வாழ்நாள் செயல் திட்டமாகக் கொண்ட ஓய்வில்லாச் சூரியன்; தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்; அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர்; களம் கண்ட 13 தேர்தல்களிலும் வெற்றி கண்ட சாதனையாளர்; ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்று மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நலன் விளைவிக்கும் திட்டங்களை வழங்கியவர்; இந்திய ஜனநாயகக் காவலராகத் திகழ்ந்த மூத்த அரசியல் தலைவர்; இலக்கியம் - கவிதை - இதழியல் - நாடகம் - திரைப்படம் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்; திருக்குவளையில் பிறந்து - திருவாரூரில் வளர்ந்து - உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த  ‘தமிழினத் தலைவர்' கருணாநிதி நூற்றாண்டு விழா 2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்குகிறது.

நூற்றாண்டு நாயகர் கருணாநிதி பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலன் திட்டங்களையும் ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது என்றாலும், தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திடக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.

ஜூன் 3- கருணாநிதி நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் வடசென்னையில் தச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

ஜூன் 20-ஆம் நாள்  திருவாரூரில் “கலைஞர் கோட்டம்” திறப்புவிழா
பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார்  திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார். இந்தவிழா, முழு நாள் நிகழ்வாகக் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவினைக் கழக மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 2023 ஜூன் 3 தொடங்கி, 2024 ஜூ 3 வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும். 

ஒவ்வொரு நிகழ்வும் திராவிடஇயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும், கருணாநிதியின் அளப்பரிய சாதனைகளை மக்களின் நெஞ்சில் பதியச் செய்யும் வகையிலும் அமைந்திட வேண்டும்.

ஜூன்- 3 ஆம் தேதி கிளைக்கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கருணாநிதி திருவுருவப் படத்தினை வைத்து, கழகத் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்திட, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்,  வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும். 

திமுகவை பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது, அதன் கிளைக்கழகங்களை ஊர்தோறும் சென்று கொடியேற்றித் தொடங்கி வைத்தவர் கருணாநிதி.

“ஊர்கள் தோறும் திமுக”
75 ஆம் ஆண்டில் கழகம் அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில், கழகக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை என்னும் பெருமைமிகு நிலையை எட்டியிருக்கிறோம். 

கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி, “ஊர்கள் தோறும் திமுக” எனும் தலைப்பில், கிளைக்கழகங்களில் அமைந்துள்ள நமது பழைய கொடிக்கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

“எங்கெங்கும் கலைஞர்”
கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு கழக மாவட்டங்கள் தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி - அனுமதி பெற்று, “எங்கெங்கும் கலைஞர்” என்ற அடிப்படையில், கருணாநிதி முழு உருவச்சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

“கழகமே குடும்பம்”
இந்த நூற்றாண்டு நிகழ்ச்சிகளில் முக்கியமாக, கழக மாவட்டங்களில் உள்ள ஒன்றியம், நகரம்,பகுதி, பேரூர் அளவில் 70 வயதுக்கும் மேலான, அரும்பாடுபட்ட கழக மூத்த முன்னோடிகளுக்குப் “கழகமே குடும்பம்” எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

கழகத்தின் மூத்த முன்னோடிகளின் இல்லங்களுக்கு கழக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று கௌரவிக்க வேண்டும்.

அதோடு, மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கும் வகையிலான நிகழ்வுகளையும் போட்டிகளையும் நடத்தி, கருணாநிதி வரலாற்றுச் சாதனைகளை அவர்களின் நெஞ்சில் பதியச் செய்திட வேண்டும். அவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதுடன், கருணாநிதி எழுதிய புத்தகங்களையும் வழங்கிட வேண்டும். ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் கழகக் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கல்வி உதவிகளை வழங்கிடலாம்.

“என்றென்றும் கலைஞர்” 
பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் “என்றென்றும் கலைஞர்” எனும் தலைப்பில், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டும். 

இத்தகைய கூட்டம் நடைபெறும் இடம் - தேதி பட்டியலை மாவட்டக் கழக நிர்வாகம் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

“கலைஞர் படிப்பகங்கள்”
படிப்பகங்களை உருவாக்கி மக்களை அறிவாற்றல் மிக்க ஜனநாயக சக்தியாக மாற்றிய இயக்கம், திமுக. இன்றைய சூழலுக்கேற்ப கணினி, இண்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்கிட வேண்டும். அது பொதுமக்களுக்கு உதவிடும் மையங்களாகத் திகழ்ந்திட வேண்டும். 

கழகத்தில் உள்ள அனைத்து அணிகளின் சார்பிலும் ஓராண்டு முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் செயல் திட்டத்தினை உருவாக்கி, தலைமைக் கழகத்தின் அனுமதியைப் பெற்று, இளைய தலைமுறை பயன்பெறும் வகையில் நடத்திட வேண்டும்.

நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியான, நூற்றாண்டு நாயகர் கருணாநிதியின் புகழை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிலைபெறச் செய்யும் வகையில் அவரது நூற்றாண்டு விழாவினை முனைப்பாகவும் முழுமையானதாகவும் பயனுள்ள வகையிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com