அரசு ஐடிஐகளில் ரூ.2,877.43 கோடியில் நடைபெற்று வரும் புதிய திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிண்டி, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) அவா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிண்டி அரசு ஐடிஐ-யில் கட்டமைப்பு வசதி பணிகள் முடிவுறும் நிலையிலும், செங்கல்பட்டு அரசு ஐடிஐ-யில் முடிவு பெற்று தொடக்க விழாவுக்குத் தயாராகவும் உள்ளன.
ரூ.31 கோடியில் ஆய்வகங்கள்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு ஐடிஐகளில் தொழில் 4.0 தரத்திலான நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டம் ரூ.2877.43 கோடியில் டாடா டெக்னாலஜிஸ் லிட். நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
5 நீண்டகால மற்றும் 23 குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி வரும் ஆக.1 முதல் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணிமனை கட்டடங்களை அமைக்க ஒவ்வொரு நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐடிஐ-களிலும் ரூ.31 கோடியில் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் அனைத்து அரசு ஐடிஐகளிலும் கட்டுமானப் பணிகள் வரும் ஜூன் 30 -க்குள் முடிக்கப்படவுள்ளன.
ஆய்வின்போது, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையா் கொ.வீரராகவ ராவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.