நீண்ட காலமாக கிடப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை கடந்த நவ. 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்றது.
அப்போது, ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது' என்றும் கூறியிருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10க்கும் மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 14 மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக வருகிற நவ. 18 ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் சிறப்புக் கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
இதையும் படிக்க | 10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு