சென்னை: வேளச்சேரியில் கட்டப்பட்டுள்ள யு வளைவு (டர்ன்) மேம்பாலம் நாளை திறக்கப்படுவதன் மூலம் வேளச்சேரி மக்களின் நெடுந்துயரம் முடிவுக்கு வரவிருக்கிறது.
அதாவது, சென்னையில் மத்திய கைலாஷ் - இந்திரா நகர் ரயில் நிலையம் இடையே கட்டப்பட்டுள்ள யு டர்ன் மேம்பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்துவைக்கவிருக்கிறார்.
சென்னையில் முதல் யு டர்ன் மேம்பாலம் என்றும் இதனைக் கூறலாம். ரூ. 108 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைப்பதன் மூலம், விரைவில் ராஜீவ் காந்தி சாலை போக்குவரத்து சிக்னல்கள் இல்லாத சாலையாக மாறிவிடும் என்று கருதப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் என்றால் நினைவுக்கு வரும் சென்னையின் பல இடங்களில் வேளச்சேரியும் ஒன்று. அந்த வகையில், சென்னையின் முதல் யு டேர்ன் மேம்பாலம் வேளச்சேரியில் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கும் வரவிருக்கிறது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பல சிக்னல்களைக் கடந்து பணிக்கு சென்று வந்துகொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக இது அமையும் என்று கூறப்படுகிறது.