திச்சி: பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட சிறு தேர் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. இதற்கு ரூ.8 லட்சம் மதிப்பில், திருச்சி மங்கள் அண்ட் மங்கள் நிறுவனத்தால் முற்றிலும் தேக்கு மரத்தால் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மங்கள் அண்ட் மங்கள் நிறுவன உரிமையாளர் மூக்கப்பிள்ளை பங்கேற்று தேரினை வழங்கினார்.
தேர் வெள்ளோட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி 3-ஆவது மண்டல குழு தலைவர் மு. மதிவாணன், மாமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தேரினை மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவ மண்டபத்தில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க | திருவண்ணாமலையில் பஞ்ச ரத தேரோட்டம் கோலாகலம்!
முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயிலின் பெண் ஓதுவார், ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார்.
இந்த தேர் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 6 மாத உழைப்பில், நுட்பமான கலை நயத்துடன் கூடிய வேலைப்பாடுகளுடன் வடிவமைத்துள்ளனர்.
உற்சவ காலங்களில், பக்தர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி இத்தேரினை இழுக்கலாம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.