லியோ திரைப்பட டிரைலர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதத்திற்கு காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் ரோகிணி திரையரங்கம் சம்பவதை மேற்கோள் காட்டி காவல்துறைக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார். அதில், லியோ திரைப்பட டிரைலர் வெளியிட்டபோது ரோகிணி திரையரங்கம் சேதத்திற்கு காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம்.
ரசிகர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி அவர்களை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்டதுபோல அல்லாமல் லியோ பட இசை நிகழ்ச்சியின்போது கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தாமாகவே படத் தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பாதையில் சர்ச் அல்லது மசூதிக்கள் இருந்தால் உரிய பாதுகாப்பு வழங்கலாம். கட்டுப்பாடுகளோடு அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கலாம். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து அக்.11ல் பதில் மனுத்தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.
லியோ டிரைலர் வெளியான அரை மணிநேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. இதனிடையே சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள திரையரங்கில் லியோ டிரெய்லர் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள், தியேட்டர் இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ரசிகர்கள் என்ற பெயரில் வன்முறை களியாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தியேட்டர் முழுவதும் சேதமடைந்தது. இது தொடர்பாக விடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.