'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை(அக். 19) முதல் நாவலூர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.
அதுபோல, சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள், அதாவது பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நாம் முக்கியமான திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தோம். குறிப்பாக, மாநகராட்சி சாலைப் பணிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தல், பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிக் கல்வித் துறை மூலம் கண்காணித்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களின் பணிகள் என பல்வேறு பணிகளைக் குறித்தும் நாம் ஆய்வு செய்தோம். இவ்வகை திட்டப்பணிகள் குறிப்பாக சாலைப் பணிகள், குடிநீர் திட்டங்கள், பாலங்கள், சமூகநலத் திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றித் தருவதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். பெரும்பாலான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு வருவதை காண முடிந்தாலும், ஒரு சில பணிகளில் தொய்வு இருந்ததையும் நாம் கவனித்தோம். அதற்கான விளக்கத்தையும், அது குறித்து என்ன செய்யப்படுகிறது என்பதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், துறைத் தலைவர்களும் தெரிவித்தார்கள். அதன்படி நீங்கள் அனைத்து திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
திட்டங்களில் காலதாமதம் ஏற்படுவதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நான் முந்தைய ஆய்வுக் கூட்டங்களில் தெரிவித்ததையே மீண்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. அவை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படவேண்டும் என்பதை அந்தத் திட்டத்தைத் துவக்குவதற்கு முன்பே முடிவு செய்கிறோம். உத்தேச பணி முடியும் நாட்களுக்குள் குறிப்பிட்ட பணி முடிவடையாதபோது திட்டத்திற்கான செலவு அதிகரிப்பதோடு, நிறைவேறாத பணிகளினால் அந்தப் பகுதி மக்கள் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். எனவே, எக்காரணம் கொண்டும் இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கட்டுமானப் பணிகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிவடைய வேண்டும் என்பது போல் நலத்திட்டங்களும், குறிப்பாக விளிம்பு நிலை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித குறைபாடுகளுமின்றி முழுமையாக குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.
இந்த அரசு ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. எனவே, அனைத்து துறைத் தலைவர்களும் தங்கள் துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதாரத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலமாக இலக்கு மக்களின் குடும்பங்களை மேம்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கோரும் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் பயன்பெறுவதை உறுதி செய்வது, முதல் தலைமுறை பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி பெற வழிவகை செய்வது, போன்ற பலவழிகளிலும் ஏழை, எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் வாழ்வில் வளம்பெற நீங்கள் உதவமுடியும்.
பொதுமக்கள், குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர மக்கள் அரசு திட்டங்களின் பயனைப் பெறுவதோடு வழிகாட்டுதல்களையும் பெறவேண்டும். அதிலும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயன்பெறுவது, பள்ளி, கல்லூரி அளவில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல், அவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதையும், அவர்கள் வசிக்கும் அரசு மாணவர் விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதையும் உங்கள் முக்கிய பணிகளில் ஒன்றாக நீங்கள் கருதவேண்டும்.
இந்த நல்ல தருணத்தில் நான் இரண்டு முக்கிய அறிவிப்புகளை இந்தக் கூட்டத்தின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்;
மக்களுக்காக இயங்கும் இந்த அரசு அவர்களை நோக்கிச் செல்வதன் ஒரு முயற்சி தான் இந்த 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற ஆய்வுக் கூட்டம். நேற்றைய தினம், பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் இந்த மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு திட்ட செயலாக்கம் பற்றி நேரடியாக அறிந்து உங்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பார்கள். அதன் அடிப்படையில், அரசின் திட்டங்கள் மேலும் செம்மைபடுத்தப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நீங்கள் அளித்த வாக்குறுதிகள் அவைகளை எல்லாம் நீ ங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் சிறப்பாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அரசிற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி, அரசின் திட்டங்களை, சேவைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத பணியினை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு, அரசுக்கும் உங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் நல்ல பெயரை ஈட்டித் தரவேண்டும் என்று பேசியுள்ளார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.த.பிரபு சங்கர், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.