சென்னை: 2024 ஆம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், 'ஸ்பீக்கிங் பார் இந்தியா' இரண்டாவது ஆடியோ உரையில் தெரிவித்துள்ளார்.
ஸ்பீக்கிங் பார் இந்தியா என்ற தலைப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடி வருகிறார்.
சமீபத்தில் அவரது முதல் ஆடியோ உரை வெளியான நிலையில், சனிக்கிழமை 2 ஆவது ஆடியோ உரை வெளியாகி உள்ளது.
இதில், 2014, 2019 மக்களவைத் தேர்தலில் ஏமாந்தது போல் 2024 மக்களவைத் தேர்தலிலும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. 2024 தேர்தலில் பாஜக ஒட்டு மொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம் இந்தியாவை மீட்டெடுப்போம்.
உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா?
இந்தியா கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றண்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா? இது பற்றி சிறப்புக் கூட்டத்தில் விவாதித்தீர்களா? அல்லது பதிலளித்தீர்களா?
இதையும் படிக்க | மெட்ரோ ரயில்களின் இயக்கத்தைத் தடுப்பவா்களுக்கு 4 ஆண்டுகள் சிறை
மத்திய பாஜக அரசு, எல்லா திட்டங்களுக்கும் வாய்க்குள் நுழையாத பெயராக பார்த்து வைப்பர்கள், அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
வகுப்புவாதம், ஊழல், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள் கொண்டதாக பாஜக அரசு உள்ளது. பாஜகவின் வகுப்புவாத கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே குரலாக முழங்க வேண்டும்.
இந்தியா கூட்டணியின் பிரசாரம் பாஜக கட்சி, மோடியின் பிம்பத்தை கிழித்துவிட்டது. சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டிருக்கிறது.
60 மாதங்கள் கொடுங்கள் இந்தியாலை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்று கூறிய மோடிக்கு, கூடுதலாக இன்னொரு 60 மாதங்களையும் நாட்டு மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி விட்டரா என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்.
மேலும் அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.