திருப்பூர்: கொச்சுவேலி விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யாததால் அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சுவேலி ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் கொச்சுவேலி விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நேற்றிரவு திருப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது ஏ1 பெட்டியில் அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் ஏ1 பெட்டியில் ஏசி வேலை செய்யவில்லை என்று ரயில்வே காவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருப்பூரில் ஏசி கோளாறு சரிசெய்ய முடியாததால், போத்தனூர் ரயில் நிலையத்தில் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டு ஏசி கோளாறு சரிசெய்யப்பட்டது.
ரயிலில் அபாய சங்கிலி இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்திய சம்பவம் திருப்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.