ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இன்று(ஏப். 15) ராமநாதபுரத்தில் வாகனப் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “ஓ. பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் தில்லிக்கு தேவைப்படுகிறார். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாற்ற வேண்டும். அதை அடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற வேண்டும். பிரதமர் மோடியின் எழுச்சிமிகு தலைமையின்கீழ், கிராமப்புறங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்” என்றார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கையில் பலாப்பழம் சின்னம் பொறித்த பதாகையை கையில் ஏந்தியபடி ஜெ.பி. நட்டா திறந்த வாகனத்தில் நின்று கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார். ஜெ.பி. நட்டாவுடன் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பாஜக தலைவர்கள் உடனிருந்தனர்.