தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் உள்ள் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருவதை காண முடிகிறது.
இந்த நிலையில், திண்டுக்கல் மக்களவை தொகுதியில் கூன் விழுந்த முதுகுடன், கையில் ஊன்றுகோல் உதவியுடன் பொடி நடையாக நடந்து சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார் 102 வயதான மூதாட்டி ‘சின்னம்மாள்’.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அந்த மூதாட்டி இன்று(ஏப். 19) வாக்களித்தார். தள்ளாத வயதிலும் தபால் ஓட்டு செலுத்தாமல், நேரடியாக வாக்குச்சாவடிக்கே சென்று வாக்குப்பதிவு செய்துள்ள மூதாட்டியை அங்கிருந்த வாக்காளர்கள் பலரும் பாராட்டினர்.
இந்த காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.