உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

கள்ளிக்குடி அடுத்த சென்னம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வராததால் வெறிச்சோடி இருக்கும் வாக்குச்சாவடி
கள்ளிக்குடி அடுத்த சென்னம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வராததால் வெறிச்சோடி இருக்கும் வாக்குச்சாவடி

திருமங்கலம் அருகே தனியார் உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தலைப் புறக்கணித்து 5 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடி - காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறால் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும். எனவே சம்பந்தப்பட்ட உரஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே மனு அளித்திருந்த நிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் செந்தாமரை ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

தொடர்ந்து, கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் நேற்று வட்டாட்சியர் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக நேற்று வட்டாட்சியரிடம் ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்த நிலையில் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த ஐந்து கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனை அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, வட்டாட்சியர் செந்தாமரை, திருமங்கலம் டிஎஸ்பி அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்தும் தற்போது மூன்று மணி நேரத்தை கடந்தும் ஐந்து ஊரைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்களிக்கவில்லை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com